செய்திகள்

மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்ககோரி கிராம மக்கள் மறியல்

Published On 2018-08-01 08:02 GMT   |   Update On 2018-08-01 08:02 GMT
மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மின் கம்பத்தை ரோட்டின் குறுக்கே போட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர்:

மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு ஊராட்சிக்குட்பட்ட கரையான் மேடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த 10ஆணடுக்கு மேலாக கரையான் மேடு பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சேதமடைந்த சாலையால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காரடையான் மேடு-அத்திபட்டு ரெயில்வே சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென சாலை ஓரம் கிடந்த மின் கம்பத்தை ரோட்டின் குறுக்கே போட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி ராஜேந்திரபாபு, அத்திபட்டு ஊராட்சி செயலாளர் பொற்கொடி ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது
Tags:    

Similar News