பழனி பகுதி குளங்களில் மண் கடத்தல் அதிகரிப்பு
பழனி:
பழனி-கொடைக்கானல் ரோட்டில் உள்ளது அய்யம்புள்ளி குளம். இக்குளத்தில் கடந்த 26-ந் தேதியன்று நள்ளிரவில் 4 டிராக்டர்களில் அனுமதியின்றி மண் எடுத்துக் கொண்டு இருந்தனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததை அடுத்து பழனி தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் மணி, வருவாய் அலுவலர் பிரபு சிவசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினரைக் கண்டடிராக்டர் டிரைவர்கள் டிராக்டரை வேகமாக ஓட்டி தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை விரட்டிச் சென்று சம்பவ இடத்தில் 2 டிராக்டர்களையும் 27-ந் தேதி ஒரு டிராக்டரும் பிடித்தனர். ஒரு டிராக்டர் மட்டும் பிடிபடவில்லை.
மண் ஏற்றி சென்ற டிராக்டர் பாலசமுத்திரம் பகுதியில் மருது என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. டிராக்டரை வருவாய்த்துறையினர் கைப்பற்றி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பழனி நகர் பகுதியில் உள்ள குளங்களில் இதுபோன்று தொடர்ந்து மண் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. எனவே இதன் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.