செய்திகள்

கோவையில் நூதனமுறையில் ஏ.டி.எம்.எந்திரத்தை திறந்து ரூ.22 லட்சம் திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது

Published On 2018-07-25 10:32 GMT   |   Update On 2018-07-25 10:32 GMT
கோவையில் நூதனமுறையில் ஏ.டி.எம்.எந்திரத்தை திறந்து ரூ.22 லட்சம் திருடிய ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

கோவை:

கோவை ராமநாதபுரம் பகுதியில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஒண்டிப்புதூரை சேர்ந்த ஜாஜூதின் (30), ராமநாதபுரத்தை சேர்ந்த ஆரோக்கிய தாஸ் (26) ஆகிய 2 பேர் வேலைப்பார்த்து வந்தனர். இவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது தனியார் வங்கிக்கு சொந்தமான காந்திபுரம், ராமநாதபுரம் ஆகிய ஏ.டி.எம். எந்திரங்களில் வைத்த ரூ. 21 லட்சத்து 99 ஆயிரம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த தனியார் நிறுவனத்தினர் அந்த 2 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வுசெய்தனர். அப்போது கடந்த மாதத்தில் 4 முறை ஜாஜூதினும், ஆரோக்கிய தாசும் பணத்தை நிரப்பிய பிறகு மீண்டும் ஏ.டி.எம். மையத்துக்கு வந்தது பதிவாகி இருந்தது.

அப்போது அவர்கள் ரகசிய எண்ணை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து ரூ. 21 லட்சத்து 99 ஆயிரத்தை திருடி சென்ற காட்சியும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் ஜெகதீசன் என்பவர் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உதவிய அக்பர் அலி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News