செய்திகள்

வேலூர் ஜெயில் கைதிகள் 7 பேர் விடுதலை - குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்பு

Published On 2018-07-25 10:13 GMT   |   Update On 2018-07-25 10:13 GMT
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் ஜெயிலில் இருந்து முதற்கட்டமாக 7 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
வேலூர்:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகளிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்தது.

சட்டசபையிலும் இது பற்றி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி பேசி இருந்தனர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு சிறையிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளின் விவரங்களை அரசு பட்டியல் எடுத்து வைத்துள்ளது. 60 வயதுக்கு மேல் 5 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் ஆகியோரது நன்னடத்தை விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

வேலூர் ஜெயிலில் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாகும் தகுதியில் உள்ளனர். இவர்கள் குறித்த பட்டியல் அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் முதற்கட்டமாக 7 பேரை விடுதலை செய்வதற்கான ஆணை நேற்று இரவு வேலூர் ஜெயிலுக்கு வந்தது. இதையடுத்து இன்று காலை ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) முருகேசன், 7 பேருக்கும் அவர்களது உடமைகள், ஜெயிலில் கைதிகள் வேலை பார்த்ததற்கான கூலி பணம் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தார்.

ஜெயிலுக்கு வெளியே காத்திருந்த கைதிகளின் மனைவி, குழந்தைள் மற்றும் உறவினர்கள் அவர்களை கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News