செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே கூலித்தொழிலாளி மரணத்தில் மர்மம் நீட்டிப்பு- கழுத்தில் காயம் இருந்ததால் பரபரப்பு

Published On 2018-07-23 12:26 GMT   |   Update On 2018-07-23 12:26 GMT
பாவூர்சத்திரம் அருகே மரணமடைந்த கூலித்தொழிலாளி கழுத்தில் இரத்த காயம் இருந்ததை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கரிசலூரை சேர்ந்தவர் ஆறுமுக நயினார் என்ற குட்டி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி(37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 20-ந் தேதி ஆறுமுகநயினார் என்ற குட்டி குடும்பத்துடன் பெத்தநாடார்பட்டியில் உள்ள மாயாண்டி கோவில் திருவிழாவுக்கு சென்றார்.இரவில் ஜெயந்தி மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் பட்டிமன்றம் பார்த்துவிட்டு வருவதாக கூறினார்.

இந்த நிலையில் ஆறுமுகநயினார் என்ற குட்டி 21-ந் தேதி காலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் மகிழ்வண்ணநாதபுரம் குளத்தில் ஆறுமுகநயினார் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது ஆறுமுகநயினார் முட்டளவு உள்ள தண்ணீரில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் ஊசி போன்ற பொருளை வைத்து குத்திய ரத்தக்காயம் இருந்தது. உடனடியாக போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இந்நிலையில் பாவூர்சத்திரம் கரிசலூர் பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News