கோவை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து என்ஜினீயர் பலி
கோவை:
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மதன் (வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரி.
இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலை தேடி கோவைக்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
எனவே கோவை கணபதியில் உள்ள நண்பரின் அறையில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இவரை பார்ப்பதற்காக நண்பர் பிரனவ் என்பவர் நேற்று கோவைக்கு வந்தார். பின்னர் இரவு ஊருக்கு செல்வதாக கூறினார்.
இதனையடுத்து அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக மதன் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரத்துக்கு அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிள் சத்தி ரோடு கணபதி 3 நம்பர் பஸ் நிலையம் அருகே சென்ற போது திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மதன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பிரனவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் மத்திய போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான மதனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #accident