உச்சிப்புளி அருகே கயிறு தொழிற்சாலைக்கு தீ வைப்பு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள குப்பாணி வலசையை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 42). இவர் புதுமடம் பகுதியில் கயிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இரவு நேரத்தில் ஆலையில் சில தொழிலாளர்கள் தங்குவது வழக்கம். சம்பவத்தன்று ஆலையின் ஒருபுறத்தில் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆலையின் மற்றொரு புறத்தில் இருந்த எந்திரத்தின் 70 அடி கன்வேயர் பெல்ட் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த ஊழியர்கள் உரிமையாளருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மற்ற பகுதிக்கும் பரவியது. இதில் ஆலையில் இருந்த எந்திரங்கள், மூலப் பொருட்கள் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ரவிசங்கர் உச்சிப்புளி போலீசில் புகார் செய்தார். அதில் ஆலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மாயராஜலட்சுமி வழக்குப் பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்.