செய்திகள்

நத்தம் அருகே வாகன சோதனை: தடை செய்யப்பட்ட 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2018-07-11 18:30 GMT   |   Update On 2018-07-11 18:30 GMT
நத்தம் அருகே வாகன சோதனையின் போது, தடை செய்யப்பட்ட 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நத்தம்:

நத்தம் அருகே வாகன சோதனையின் போது, தடை செய்யப்பட்ட 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார்-சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையில் இருந்து நத்தத்துக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் நத்தம் ராக்காச்சிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சரக்கு வேன் மற்றும் கார் முன்னும், பின்னுமாக வேகமாக வந்தன. இதையடுத்து அவற்றை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது 2 வாகனங்களில் வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 வாகனங்களிலும் சோதனை செய்தனர். அப்போது மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் 15 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் சரக்கு வேன் டிரைவர் நத்தத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 26), கார் டிரைவர் நவாஸ்கான் (31) என்பதும், மதுரையில் இருந்து நத்தத்துக்கு புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்களும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனும், காரும் பறிமுதல் செய்யப்பட்டன. 
Tags:    

Similar News