செய்திகள்

மெட்ரோ ரெயில் பணி முடிந்ததால் பிராட்வே சந்திப்பில் மீண்டும் இருவழிப்பாதை தொடங்கியது

Published On 2018-07-11 07:01 GMT   |   Update On 2018-07-11 07:01 GMT
மெட்ரோ ரெயில் பணி முடிந்ததால் பிராட்வே சந்திப்பில் மீண்டும் இருவழிப்பாதை 4 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கியது.

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை தற்போது நடந்து வருகிறது.

பயணிகள், பொது மக்களிடையே மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

சென்ட்ரலில் இருந்து பிராட்வே வழியாக வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் சுரங்க மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

இதற்காக பிராட்வே சந்திப்பில் ஐகோர்ட்டு நுழைவு வாயிலின் அருகே மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பதற்காக வாகன போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. ராஜா அண்ணாமலை மன்றம் முதல் பிராட்வே சந்திப்பு சிக்னல் வரை 4 ஆண்டுகளாக ஒருவழிப்பாதை வழியாக வாகனங்கள் சென்று வந்தன.

இந்த நிலையில் பிராட்வேயில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்தது. இதையொட்டி அந்த சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. புதிய ரோடுபோடப்பட்டு உள்ளது.

நேற்று முதல் பிராட்வே சந்திப்பு சாலை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதனால் 4 ஆண்டுகளுக்குப் பின் அங்கு வாகனங்கள் எளிதில் சென்று வருகின்றன. அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Tamilnews

Tags:    

Similar News