செய்திகள்

ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் தற்கொலை- நெல்லை ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2018-07-06 17:20 GMT   |   Update On 2018-07-06 17:20 GMT
ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நெல்லை ஆர்.டி.ஓ. மைதிலி விசாரணை நடத்தி வருகிறார்.
ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 50). துப்புரவு தொழிலாளி. இவரது மனைவி இறந்துவிட்டார். இவர் பார்வதிராஜன்(26) என்ற மகன், பார்வதி(23) என்aற மகளுடன் வசித்து வந்தார்.

இதில் பார்வதிக்கும் அவரது தாய்மாமன் மகன் அசோக்குக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இருவரும் சென்னையில் வசித்து வந்தனர்.இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த 2-ந் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பார்வதி மனமுடைந்து இருந்துள்ளார். இதையடுத்து வாழ்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.

மகள் வி‌ஷத்தை குடித்து உயிருக்கு போராடியதை பார்த்த மாரியப்பன் மீதமிருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். வி‌ஷத்தை குடித்து உயிருக்கு போராடிய தந்தை-மகளை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் பார்வதி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மாரியப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பார்வதிக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆவதால் இது குறித்து நெல்லை ஆர்.டி.ஓ.மைதிலி விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News