செய்திகள்
பூந்தமல்லியில் உள்ள பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரில் நடந்து செல்லும் மாணவர்கள்.

திருவள்ளூரில் 83 மி.மீட்டர் மழை

Published On 2018-07-03 09:07 GMT   |   Update On 2018-07-03 09:07 GMT
சென்னை மற்றும் அதன் சுற்றுபுறப் பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. திருவள்ளூரில் 83 மி. மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருவள்ளூர்:

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை 6 மணியளவில் மேகம் திரண்டு ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நள்ளிரவில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வில்லிவாக்கம், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, பிராட்வே, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், கொடுங்கையூர், வியாசர்பாடி, மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், ஆலந்தூர், மீனம்பாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி, பெருங்குடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.

இதில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது.

திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, அம்பத்தூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. பலத்த மழை காரணமாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இரவு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 83 மி. மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) விவரம் வருமாறு:-

திருவள்ளூர் - 83
திருத்தணி - 81
அம்பத்தூர்- 80
பூண்டி- 74
பூந்தமல்லி - 57
செம்பரம்பாக்கம் - 47
திருவாலங்காடு- 47
ஊத்துக்கோட்டை- 45
தாமரைப்பாக்கம்- 38
கும்மிடிப்பூண்டி - 33
பொன்னேரி - 31
ஆர்கே பட்டு - 30
செங்குன்றம் - 22
சோழவரம்-22
பள்ளிப்பட்டு 17
Tags:    

Similar News