செய்திகள்

ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் நிரந்தரமாக டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தல்

Published On 2018-06-25 11:36 GMT   |   Update On 2018-06-25 11:36 GMT
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக கண், காது, எலும்பு தொடர்பான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒட்டன்சத்திரம்:

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒட்டன்சத்திரம் ஒன்றிய மாநாடு சத்திரப்பட்டியில் நடந்தது.ஒன்றிய தலைவர் கிட்டுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வநாயகம் தொடக்க உரையாற்றினார்.

சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கருணாகரன் மற்றும் உயரம் தடைபட்டோர் அமைப்பின் மாநில செயலாளர் வெங்கடேஷ் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயலாளர் பகத்சிங் நன்றி கூறினார்.

மாநாட்டில் கீழ்க் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒட்டன்சத்திரம் தாலுகா மிகப்பரந்த அளவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பகுதியாக உள்ளது. இங்குள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை போக்கிக்கொள்ள ஒரே ஒரு அரசு மருத்துவமனைதான் உள்ளது.

குறிப்பாக பெயரளவிற்குதான் மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். விபத்து நடந்தாலோ அல்லது வேறு ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலோ சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் இல்லாத காரணத்தால் அவசர சிகிச்சை உள்ளிட்ட அனைத்திற்கும் ஒட்டன் சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக கண், காது, எலும்பு தொடர்பான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News