செய்திகள்

மதுரை அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2018-06-25 11:02 GMT   |   Update On 2018-06-25 11:02 GMT
மதுரை அருகே நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை அருகே உள்ள கீழகள்ளந்திரியைச் சேர்ந்தவர் நந்தீஸ்வரன். இவரது மனைவி பவித்ரா (வயது 25). நேற்று கணவன்- மனைவி இருவரும் அழகர் கோவில் சாலையில் உள்ள திருவிழான்பட்டியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள், பவித்ரா அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலூர் அருகே உள்ள சின்னசூரக்குண்டைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி அய்யம்மாள் (50). இவர் பெரிய சூரக்குண்டு கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நடந்த அன்னதானத்தில் பங்கேற்று உணவு சாப்பிட்டார்.

அப்போது அருகில் இருந்த மர்ம நபர், அய்யம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார்.

இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News