திண்டுக்கல்லில் இறைச்சி கடை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை
திண்டுக்கல்:
திண்டுக்கல் குடைபாறைப்பட்டியை சேர்ந்த மருதை மகன் குமரேசன் (வயது28). அதே பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனிஷா என்ற மனைவியும், அக்ஷயா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இன்று வழக்கம்போல் கறிக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆர்.வி. நகர் காளியம்மன் கோவில் அருகே சென்றபோது திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.
அவர்கள் வைத்திருந்த அரிவாளால் குமரேசனின் பின்னந்தலையில் பயங்கரமாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த குமரேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டபகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.