செய்திகள்

மானூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

Published On 2018-06-16 18:09 GMT   |   Update On 2018-06-16 18:09 GMT
மானூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
மானூர்:

மானூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் குறிச்சிநகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பட்டாணி செல்வி (42). இவர்களுடைய மகன் இசக்கிமுத்து (14). இசக்கிமுத்து பக்கத்து ஊரான அலவந்தான்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இவர்களது வீட்டுக்கு மின் இணைப்புக்காக அங்குள்ள மின்கம்பத்தில் இருந்து மின்இணைப்பு ஒயரை வீட்டின் முன்பாக ஒரு இரும்பு குழாய் நட்டு, அதன் மூலம் சர்வீஸ் பைப்புக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் எப்படியோ மின்கசிவு ஏற்பட்டு, அந்த இரும்பு குழாயில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனை அறியாத இசக்கிமுத்து நேற்று காலையில் பல் துலக்கியவாறு இரும்பு குழாயில் சாய்ந்துள்ளான். அதில் மின்சாரம் இருந்ததால் இசக்கிமுத்து தூக்கி வீசப்பட்டான். இதனால் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அவனை ஆம்புலன்சு மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது இசக்கிமுத்து ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

தனது ஒரே மகனை இழந்த தாய் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News