சென்னையில் 2-வது நாள் போலீஸ் வேட்டையில் 500 பேர் பிடிபட்டனர்
சென்னை:
சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் 14 பேரிடம் வழிப்பறி நடந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவில் சென்னை மாநகர் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் 700-க்கும் மேற்பட்ட லாட்ஜீகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பிடிபட்டனர்.
போலீசாரின் சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒரே நாள் இரவில் பிடிபட்டனர். வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளும் சிக்கினர்.
2-வது நாளாக நேற்று இரவும் வாகன சோதனை நடத்தப்பட்டது. குற்ற பின்னணியை கொண்டுள்ள பழைய குற்றவாளிகள், பிடிவாண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த சோதனை நடந்தது.
இதில் நேற்று இரவும் 500 பேர் சிக்கினர். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 20 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 7 பேரும் சிக்கினர். வாகன சோதனையின் போது விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 53 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.