செய்திகள்

திருச்சி விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2018-05-22 16:09 GMT   |   Update On 2018-05-22 16:09 GMT
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமான நிலையத்தில் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு:

திருச்சி விமானநிலையத்துக்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சவுதிஅரேபியா உள்பட பல நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமானநிலையம் வழியாக தங்கம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை வான்நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை வான்நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்ததில், அவர்கள் ஸ்டேப்லரில் மறைத்து 300 கிராம் எடை கொண்ட தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே 2 பேரிடமும் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News