தவளக்குப்பம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் தற்கொலை
அரியாங்குப்பம்:
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் சிவபாலன் (வயது39). இவருக்கு நிஷா, சந்தியா ஆகிய 2 மனைவிகளும், 4 குழந்தைகளும் உள்ளனர். விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகராக இருந்து வந்த சிவபாலன் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே குடிப்பழக்கத்துக்கு அடிமையான சிவபாலன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்தார். மேலும் கட்சி பணியில் இருந்தும் ஒதுங்கி இருந்தார். தொடர்ந்து சிவபாலன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால் குடும்பம் வறுமையில் வாடியது. மேலும் மதுகுடிக்க பணம் இல்லாமல் சிவபாலன் திண்டாடி வந்தார்.
இதனால் தற்கொலை செய்து கொள்ள சிவபாலன் முடிவு செய்தார். நேற்று இரவு அனைவரும் தூங்கிய பிறகு வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். உடனடியாக சிவபாலனை அவரது குடும்பத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிவபாலன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.