செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பஸ்களை நிறுத்தி போராட்டம் நடத்துவோம்

Published On 2018-04-24 17:14 GMT   |   Update On 2018-04-24 17:14 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தொடர்ந்து மெத்தன போக்கை கடைபிடித்தால் பஸ்களை நிறுத்தி வைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்:

காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் மற்றும் நாகை மண்டல அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சை சிவகங்கை பூங்கா முதல் பனகல் கட்டிடம் வரை இன்று பேரணி நடைபெற்றது.

மண்டல பொது செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். பேரணியில் சி.ஐ.டி.யூ மணிமாறன், ஏ.ஐ.டி.யூ.சி சேகர், ஐ.என்.டி.யூ.சி வைத்தியநாதன், சோழபுரம் கலியன் மற்றும் நிர்வாகிகள் முருகேசன், வடிவேல், சீனிவாசன், காளிமுத்து உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட மண்டல பொது செயலாளர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தி வருகிறது. இதனை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இன்று பேரணி நடத்தியுள்ளோம்.

இந்த பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடித்தால் பஸ்களை நிறுத்தி வைத்து மிக பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News