தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணியாக சென்றவர்கள் மீது வழக்கு
தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் 17 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் இன்று 72-வது நாளாக போராட்டம் நடக்கிறது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி போராட்ட குழுவினர் நேற்று மடத்தூரில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.
சிப்காட் வளாகத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதில் 17 இடங்களில் இருந்தும் ஏராளமான பொது மக்கள் கார் மற்றும் வேன்கள், ஆட்டோக்களில் வந்து பங்கேற்றனர்.
பேரணிக்கு போலீஸ் அனுமதி இல்லாததால் இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து போராட்டக்குழுவை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன், ஹரி ராகவன், ராமச்சந்திரன், ரமேஷ், சகாயம், இக்பால், மாரியப்பன், சக்திவேல், பாண்டி, வசந்தராஜன் உள்ளிட்ட கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். #BanSterlite #TalkAboutSterlite