சுவாமிமலை அருகே பாத யாத்திரை சென்ற இளம்பெண் பாம்பு கடித்து மரணம்
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த நடுப்பட்டி, அருந்தவபுரம் மேலவீதியை சேர்ந்தவர் சங்கர். இவர் குடும்பத்தினருடன் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு குல தெய்வ வழிபாட்டுக்காக பாதயாத்திரை புறப்பட்டார்.
அவர்கள் நேற்று இரவு கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் தங்கினர். அவர்கள் ஒரு வீட்டு முன்பு படுத்து இருந்தனர். அப்போது அருகில் உள்ள வயல் வெளியில் இருந்து வந்த பாம்பு சங்கரின் மகள் பிரியா (வயது 19) என்பவரை கடித்து விட்டது. இதனால் மயங்கி விழுந்த பிரியாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து சுவாமி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பாதயாத்திரை சென்ற இளம் பெண் பாம்பு கடித்து இறந்த சம்பவம் சுவாமிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.