செய்திகள்

சுவாமிமலை அருகே டயர் குடோனில் திருடிய கொள்ளையர்கள் கைது

Published On 2018-04-21 11:28 GMT   |   Update On 2018-04-21 11:28 GMT
சுவாமிமலை அருகே டயர் குடோனில் திருடிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமிமலை:

கும்பகோணம் மேலக் காவேரியை சேர்ந்த சாதிக் பாட்சா (வயது 43). இவருக்கு சொந்தமான டயர் குடோன் சுவாமி மலையை அடுத்த ஏரகரத்தில் உள்ளது. இந்த குடோனில் கடந்த 12-ந் தேதி இரவு ரூ.1½ லட்சம் மதிப்புள்ள வாகனங்களின் டயர்கள் திருட்டு போனது. இதுதொடர்பாக சுவாமிமலை போலீசில் சாதிக் பாட்சா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் ஆடுதுறையில் நகைக்காக ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆடுதுறையை சேர்ந்த அறிவழகன் (வயது 30), செல்லத்தம்பி (எ) சாதிக் (வயது 31) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சாதிக் வீட்டில் சோதனை நடத்தியபோது கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் புதிய டயர்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சாதிக்கிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஆடுதுறை கன்சா மேட்டுத் தெருவை மூவேந்தன் (வயது 22) என்பவரும் சாதிக்பாட்சா குடோனில் டயர்களை திருடி உள்ளார். அவர்கள் திருடிய டயர்களை மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்றுள்ளனர்.

இது தொடர்பாக மூவேந்தனையும் போலீசார் கைது செய்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டயர்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News