செய்திகள்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரி சென்ட்ரலில் ரெயில் மறியல் போராட்டம் - 150 பேர் கைது

Published On 2018-04-21 10:25 GMT   |   Update On 2018-04-21 10:25 GMT
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரி சென்ட்ரலில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

எஸ்.சி.-எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ., தமிழ்ப்புலிகள், மே 17 இயக்கம், மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் இணைந்து இன்று ரெயில் மறியல் போரட்டம் நடத்தின.

திருமுருகன், சத்திரியன் வேணுகோபால், தெகலான் பாகவி, அமீர்அம்சா உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ஊர்வலமாக சென்று சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.

போலீசார் தடுப்பு கம்பிகள் அமைத்து போராட்டக்காரர்களை ரெயில் நிலையத்திற்குள் விடாமல் தடுத்து மறித்தனர். மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பிய அவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். போலீசார் தடுத்து மறித்ததும் தடையை மீறி நிலையத்திற்குள் சென்று மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர். 150 பேர் கைது செய்யப்பட்டு சமுதாய கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சென்ட்ரலில் மறியல் போராட்டம் நடந்ததையொட்டி அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு காணப்பட்டது. #tamilnews

Tags:    

Similar News