செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
உளுந்தூர்பேட்டை அருகே வருகிற 22 ந்தேதி நடக்க இருந்த பிளஸ்-2 மாணவி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(வயது 25). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கும் வருகிற 22-ந் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விழுப்புரம் சைல்டு லைனுக்கு புகார் சென்றது. இதையடுத்து சைல்டு லைனை சேர்ந்தவர்கள் மற்றும் திருநாவலூர் போலீசார் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மாணவியின் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் 18 வயது பூர்த்தி அடையாத அந்த மாணவிக்கு திருமணம் செய்து வைக்கமாட்டோம் என்று பெற்றோர் எழுத்து பூர்வமாக எழுதி போலீசாரிடம் கொடுத்தனர். மீறி திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு சைல்டு லைனை சேர்ந்தவர்கள் மற்றும் போலீசார் அங்கிருந்து சென்றனர்.