திண்டிவனம் அருகே கிணற்றில் பெண் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓங்கூர்- கம்பூர் சாலையோரம் பழைய கிணறு உள்ளது. அந்த கிணற்றில் நேற்று மாலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக மிதந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
அந்த பெண்ணை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசிச்சென்றார்களா? அல்லது அவர் குளிக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.