செய்திகள்

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் உடன் இருந்ததாக வெளியான தகவல் தவறு- ராம மோகன ராவ்

Published On 2018-04-18 10:13 GMT   |   Update On 2018-04-18 10:13 GMT
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் உடன் இருந்ததாக வெளியான தகவல் தவறானது என்றும், அந்த மாதிரி நான் ஆணையத்தில் தகவல் அளிக்கவில்லை என்றும் ராம மோகன ராவ் தெரிவித்தார்.

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது தலைமைச் செயலாளர் பதவி வகித்தவர் ராம மோகனராவ்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

அதில் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்த போது அமைச்சர்கள் உடன் இருந்ததாக ராம மோகனராவ் ஆணையத்தில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இது பற்றி இன்று ஆணையத்தில் ஆஜராக வந்த ராம மோகன ராவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

நான் 2 வி‌ஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட சமயத்தில் நானே 6 மணிக்கு மேல்தான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன்.

அப்போது அங்கே அமைச்சர்கள் இருந்ததாக பத்திரிகைகளில் வந்த தகவல் சரியல்ல. அந்த மாதிரி நான் ஆணையத்தில் ‘ஸ்டேட்மென்ட்’ கொடுக்கவில்லை.

தலைமை செயலாளரான நான் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்ததால் அங்கு யார் இருந்தார்கள் என்பதை நான் பார்க்க வில்லை. யார் வந்திருந்தார்கள், யார்-யார் பார்த்தார்கள் என எனக்கு தெரியாது என்றார்.

அவரிடம் நிருபர்கள் மேலும் கேள்வி கேட்க முயன்ற போது, ‘வேறு எந்த கேள்விக்கும் இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

விசாரணை கமி‌ஷனில் எனது ஸ்டேட்மென்டை வாங்கி தேவைப்பட்டால் விவரத்தை சொல்கிறேன் என்றார். #tamilnews

Tags:    

Similar News