மதுக்கடை திறக்க எதிர்ப்பு- கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த சாணர்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்காக திருவொற்றியூர் சாலையில் இருந்து கடை அமைய உள்ள பகுதி வரை சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுக்கடை திறக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சாணர்பாளையத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கோட்டாட்சியர் முத்துசாமியிடம் மதுக்கடை திறக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி மனு அளித்தனர். அப்போது அவர்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்கப்பட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.