செய்திகள்

வசூல் குறைவான வழித்தடங்களில் மாநகர பஸ் சர்வீஸ் நிறுத்தம்

Published On 2018-04-17 05:13 GMT   |   Update On 2018-04-17 05:38 GMT
வசூல் குறைவான பெரும் பாலான வழித்தடங்களில் மாநகர பஸ் சர்வீஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க. தொழிற் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. #TNTransport #Busfare

சென்னை:

சென்னை மாநகர போக்கு வரத்து கழகம் சார்பில் பயணிகள் போக்குவரத்து சேவைக்காக 3,365 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரின் 40 கி.மீட்டர் தூரம் வரையிலான பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தினமும் 50 லட்சம் பயணிகள் மாநகர பஸ் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் சர்வீஸ் வழித்தடங்களில் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மாநகர பஸ் போக்கு வரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் வசூல் வருவாய் மிகவும் குறைந்துள்ளதால் வசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி மாநகர போக்குவரத்து அதிகாரிகள் பஸ் சர்வீசை நிறுத்தம் செய்துள்ளனர்.

17 சி ஐயப்பன்தாங்கல்- பிராட்வே, 12 சி சாலிகிராமம்- மயிலாப்பூர், 565ஏ ஆவடி- சுங்குவார் சத்திரம், 565 ஆவடி-ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த பஸ்கள் வேறு இடங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து தி.மு.க. தொழிற் சங்க பொதுச்செயலாளர் எம்.சண்முகம் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்தில் சமீப காலமாக பெரும்பாலான பஸ் வழித்தடங்களில் வசூல் இழப்பு ஏற்பட்டதாக கூறி சர்வீசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக 17சி, 12சி, 565ஏ, 565 ஆகிய வழித்தட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது. உடனடியாக மீண்டும் அந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #TNTransport #Busfare

Tags:    

Similar News