செய்திகள்

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் மறியல்

Published On 2018-03-23 16:56 GMT   |   Update On 2018-03-23 16:56 GMT
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பயிர் இழப்பீட்டுத்தொகை வழங்க கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படாத நிலை உள்ளது. கடந்த 2015-16, 2016-17 நிதி ஆண்டுகளுக்கான தொகை வழங்க கோரி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனுக்களை கொடுத்ததுடன், விவசாயிகள் குறை தீர்க்கும் நாளிலும் இழப்பீட்டுத்தொகை வழங்க கோரி பல முறை வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் விவசாய சங்கத்தினர் மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் பயிர் இழப்பீட்டுத்தொகை வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து பயிர்களுக்கும் இழப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தியும், அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்இழப்பீட்டுத்தொகை வழங்க கோரியும் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர்.

கோரிக்கை மனுவை நேர்முக உதவியாளரிடம் கொடுத்து விட்டு செல்லுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. விவசாய சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் தான் மனுவை கொடுப்போம் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர்களால் கலெக்டரிடம் மனு கொடுக்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து கோரிக்கை மனுவை யாரிடமும் கொடுக்காமல் கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த நிர்வாகிகள் மற்ற விவசாயிகளுடன் சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Tags:    

Similar News