சாலை வசதி செய்து தரக்கோரி பொன்னேரி பேரூராட்சி கதவுகளை மூடி பெண்கள் போராட்டம்
பொன்னேரி:
பொன்னேரி பேரூராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு ஆற்றங்கரை மேடு, குன்னமஞ்சேரி, தர்மலிங்கம் 4-வது தெரு, 5-வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி செய்யப்படவில்லை. சாலைகள் அமைத்து 30 வருடங்களுக்கு மேல் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
அப்பகுதிகளில் சாலை வசதி செய்து தரக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், புதிய தார்சாலைகள் அமைக்க வலியுறுத்தியும் பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.
அவர்கள் சாலை வசதி செய்து தரக்கோரி அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில பெண்கள் பேரூராட்சி அலுவலக அறையை வெளிப்புறமாக பூட்டினர்.
மேலும் செயல் அலுவலர் பாஸ்கரையும் அலுவலகத்துக்குள் செல்லவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலக அறையை திறக்கவும் செயல் அலுவலரை உள்ளே செல்லவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனுமதித்தனர்.