சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறப்பு
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை தென் மேற்கு பருவமழையின் போதே நிரம்பி விட்டது. 119 அடி கொள்ளவான அணையில் 117 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். தற்போது 117 அடி தண்ணீர் இருப்பதால் 90 நாட்களுக்கு பாசனத்திற்காக பிப்ரவரி 7-ம் தேதி இடது புறம் மற்றும் வலதுபுறம் வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இரண்டாம் கட்டமாக திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டிற்காகவும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்காகவும், தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் வீதம் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் திறந்து விடப்பட்டது.
அணையிலிருந்து தொடர்ந்து 17 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்பெண்ணையாற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் கிராமங்களுக்கு தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. #tamilnews