search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்பெண்ணையாறு"

    தென்பெண்ணை ஆற்றில் தற்போது விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீரும், கெடிலம் ஆற்றில் 45 ஆயிரம் கனஅடி நீரும் செல்வதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 18-ந் தேதி கடலூர்-விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டபடி மழை வெள்ளம் சென்றது. கடந்த 19-ந் தேதி தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் சென்றது.

    மாவட்ட எல்லையான அரசூர் முதல் வடிநில பகுதியான தாழங்குடா வரை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்வெளியில் வெள்ளம் புகுந்தது.

    இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெல்லிக்குப்பம், அண்ணாகிராமம், குண்டுஉப்பளவாடி, தாழங்குடா, பெரியகங்கனாங்குப்பம், உச்சிமேடு உள்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    கடலூர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நகரங்களையும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்பு குழுவினர் மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

    இந்த நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வடிந்து செல்லாமல் மீண்டும் குடியிருப்புகளை சூழ்ந்தது.

    அதன் பின்னர் மழை இல்லாததால் தாழ்வான பகுதிகளில் தேங்கிநின்ற மழை வெள்ளம் தற்போது வடிய தொடங்கி உள்ளது. இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால் ஆறுகளில் செல்லும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீரும், கெடிலம் ஆற்றில் 45 ஆயிரம் கனஅடி நீரும் செல்வதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

    ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதாலும், கடலூர் பகுதியில் தற்போது மழை பெய்யாததாலும், குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிய தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
    தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகூர் நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
    வில்லியனூர்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுவை மற்றும் தமிழக பகுதியில் கனமழை பெய்தது.

    புதுவையில் ஒரே நாளில் 19 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகளில் புகுந்த மழை நீரை வடிய வைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பியதால் அதில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாகூர் அருகே உள்ள சித்தேரி அணை நிரம்பியது. தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏரி, வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு அதன் நீரும் ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளது.

    நேற்று பாகூர் அருகே உள்ள கிராமப்புறங்களில் தான் வெள்ளம் புகுந்து இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகூர் நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

    பாகூரில் மாட வீதி தவிர மற்ற பகுதிகளான பங்களா வீதி, புதிய காமராஜ் நகர், குட்டை, பாகூர்பேட், மகா கணபதி நகர், கூட்டுறவு குடியிருப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் பாகூர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    மக்கள் வெளியில் வர முடியாமலும், தங்களது உடமைகளை எடுத்து செல்ல முடியாமலும் தவித்தனர். பெரும்பாலான மக்கள் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர். ஆனாலும் தங்களது உடமைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அவர்கள் விடிய விடிய தூங்காமல் கண் விழித்தபடி இருந்தனர்.

    பாகூர் புதிய நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    வெள்ளம் காரணமாக பாகூர் பகுதியில் 15 குடும்பத்தினர் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பாகூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கன்னியக்கோவில் பகுதியிலும் வெள்ளம் புகுந்தது.

    மீட்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பேரிடர் மீட்பு குழுவினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தென்பெண்ணையாற்றில் மேலும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்ற தகவலால் பாகூர் பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.


    தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதுதவிர வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானதால் கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது.

    இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடலூர் நகராட்சிக்குட்பட்ட ஆல்பேட்டை அருகே தென்பெண்ணையாறு கடலில் கலக்குகிறது.

    இந்த ஆறுக்கு கர்நாடக மாநிலத்தில் திறக்கப்படும் உபரிநீர், கிருஷ்ணகிரி அணைக்கு வந்து சாத்தனூர் அணையில் சேருகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    தற்போது கனமழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    இது தவிர கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையாலும், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    முதல்கட்டமாக தென்பெண்ணை ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்பு அது படிப்படியாக நேற்று காலை 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் வரத்து நெல்லிக்குப்பம் அருகே உள்ள சொர்ணாவூர் தடுப்பணை, விசுவநாதபுரத்தில் உள்ள தடுப்பணை ஆகியவற்றின் மூலம் கணக்கெடுக்கப்படுவதாக கடலூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன்காரணமாக தென்பெண்ணை ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஆற்றின் கீழ்மட்டத்தில் இருந்து 25 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி சாலை, மேல்பட்டாம்பாக்கம் சாலை, அழகியநத்தம் சாலை தண்ணீரில் மூழ்கியது.

    இன்று காலையும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதையடுத்து கடலூர் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள குண்டுசாலை, பெரியகங்கணாங்குப்பம், செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, நாணல்மேடு, சுனாமி நகர், எஸ்.என்.சாவடி உள்ளிட்ட 50 இடங்களில் ஆற்று வெள்ள நீர் புகுந்தது.

    இந்த தண்ணீர் சுமார் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி தீவுபோல காணப்பட்டது. அங்குள்ள வீடுகளில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே அங்குள்ளவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    படகுகள் மூலம் மக்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

    இதனை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சென்றனர். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    கடலூர் அருகே பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.



    கர்நாடக அணையில் உபரிநீர் திறப்பு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் வெளுத்துகட்டிய மழை மற்றும் சாத்தனூர் அணை தண்ணீர் திறப்பு, கர்நாடக அணையில் உபரிநீர் திறப்பு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 1.75 லட்சம் கனஅடி நீர் வருகிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 1972-ம் ஆண்டு இதேபோல் வெள்ளம் ஏற்பட்டதாக கடலூர் நகர மக்கள் தெரிவித்தனர்.

    கடலூரில் தென்பெண்ணையாறு வழியாக வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையில் உடைப்பு ஏற்பட்டு 6 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அடைமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் கெடிலம், தென்பெண்ணையாறு, பரவனாறு, மணிமுக்தா, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்கள், ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளமும், தென்பெண்ணையாற்றில் கலந்தது. இதனால் நேற்று தென்பெண்ணையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலை 1 லட்சம் கனஅடி நீர் சென்ற நிலையில், மாலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீா் செல்கிறது. இதனால் பல இடங்களில் தென்பெண்ணையாற்றங்கரை நிரம்பி குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    கடலூர் குண்டுசாலை, குண்டு உப்பளவாடி பகுதிகளில் தென்பெண்ணையாற்றங்கரையில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டது. இதில் அந்த பகுதிகளில் உள்ள சுமார் 6 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள், உடனே தங்கள் வீடுகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள முகாம்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்றனர். சிலர் வீட்டு மாடிகளில் தஞ்சமடைந்தனர்.

    கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் விடுதியை விட்டு வெளியேற முடியாமல் 32 மாணவிகள், 4 பெண் ஊழியர்கள் தவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் படகுடன் விரைந்து சென்று, விடுதியில் சிக்கிய 32 மாணவிகள் மற்றும் 4 பெண் ஊழியர்களை படகு மூலம் பத்திரமாக மீட்டு வந்தனர்.

    மேலும் குமரப்பன் நகர், வெளிசெம்மண்டலம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இவர்களையும் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் 5 படகுகளுடன் சென்று மீட்டனர்.

    இவ்வாறாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேர் கே.என்.பேட்டை, பெரிய கங்கணாங்குப்பம், வன்னியர்பாளையத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
    விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு மீண்டும் உடைந்து சேதமடைந்தது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை அமைப்பு) சார்பில் ரூ.25 கோடியே 35 லட்சம் நிதியில் புதிதாக அணைக்கட்டு கட்டப்பட்டது.

    இது 13 கிராமங்கள் மற்றும் 2114.14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் அணைக்கட்டு திறக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெளியேறியது. இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே, தற்போது மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், இந்த அணைக்கட்டு மேலும் சேதமடையாமல் தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர், அந்த அணைக்கட்டின் மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். அணைக்கட்டின் வலதுபுற மதகுகள் முற்றிலும் உடைந்துள்ளதால் அங்கு தண்ணீர் செல்லாத வகையில் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி, இடதுபுற மதகுகள் வழியாக தண்ணீரை வெளியேற்றி வந்தனர்.

    நேற்று அதிகாலை தளவானூர் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இவ்வாறு அணைக்கட்டுக்கு வரும் தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அணைக்கட்டின் இடதுபுற கரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    அடுத்த சில மணி நேரத்தில் அணைக்கட்டின் கரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேறியது. நேரம் செல்ல, செல்ல அணைக்கட்டின் கரைப்பகுதி கான்கிரீட் சுவர்களும் உடைந்ததால் 3 மதகுகளும் அப்படியே சாய்ந்தது.

    தொடர்ந்து, தண்ணீரின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க ஒரு மதகு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. மற்ற 2 மதகுகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லும் அபாயத்தில் உள்ளது. அணைக்கட்டு திறக்கப்பட்டு ஓராண்டிலேயே 2-வது முறையாக உடைந்து சேதமடைந்ததால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் அவை கடலில் வீணாக சென்று கலக்கிறது. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மிகவும் கவலையடைந்தனர்.
    சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மிதந்தது.

    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் 50 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆற்றில் பிணமாக மிதந்தவர் கடலூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மதுகுடித்துவிட்டு ஊர் திரும்பும்போது குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்காலம் என போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணையாற்றில் அழுகிய நிலையில் 50 வயது பெண் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த திம்மாபுரத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மாதேசன்.
    இவர் நேற்று அலுவலகத்தில் செல்லும் போது திம்மாபுரம் அருகே தென்பெண்ணையாற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக மிதந்து கிடப்பதை கண்டார். 

    இது குறித்து உடனே கிராம நிர்வாக அலுவலர் வனஜா விற்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் குறித்து வனஜா காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பரமணியனுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆனுப்பி வைத்தனர். 

    பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விவரம் தெரியவில்லை. இறந்து கிடந்த பெண் பச்சை நிற பாவாடையும், ரோஸ் கலரில் ஜாக்கெட்டு அணிந்து இருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், மாயமான பெண்கள் விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பெண்ணை யாராவது அடித்து கொன்று விட்டு உடலை ஆற்றில் வீசி விட்டு சென்றனரா? அல்லது அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×