என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
    X

    சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

    • நேற்று இரவு முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
    • தென்பெண்ணை ஆற்றுப்பகுதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து கடந்த டிசம்பர் 1-ந்தேதி நள்ளிரவு மற்றும் 2-ந் தேதி அதிகாலை விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறை தெரிவித்திருந்தது.

    பின்னர், மழையின் தாக்கம் குறைந்ததால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் எதிரொலியாக, அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.75 அடியாக உள்ளது. அணையில் 7,041 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    இதனால், தென்பெண்ணையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும். இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றுப்பகுதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×