செய்திகள்

மாணவர்கள் போராட்டத்தால் போலீஸ் உஷார் - உளவு பிரிவினர் தீவிர கண்காணிப்பு

Published On 2018-01-23 06:27 GMT   |   Update On 2018-01-23 06:27 GMT
பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த மாணவர்கள், இளைஞர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் உளவு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்களை சிறைபிடித்தும் போராட்டம் நடத்தினர்.

மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்த நிலையில் சென்னையில் நேற்று போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. இன்று கல்லூரி-பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று தகவல் பரவி உள்ளது.

இதே போன்று மாநிலம் தழுவிய அளவில் மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாவட்ட தலை நகரங்களில் போராட்டம் வெடித்தது.

குறிப்பாக சென்னையில் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் திரண்டனர். அவர்களை மெரினாவில் இருந்து அப்புறப்படுத்துவதற்குள் போலீசாருக்கு பெரும்பாடாகி விட்டது. கடுமையான போராட்டத்துக்கு பின்னரே மெரினாவில் திரண்டிருந்த மாணவர்களை போலீசாரால் வெளியேற்ற முடிந்தது. அதுபோன்ற ஒரு போராட்டத்தை பஸ் கட்டண உயர்வுக்கு எதிராகவும் நடத்த மாணவர்களும், இளைஞர்களும் திட்டம் தீட்டி வருவதாகவும் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து மெரினா கடற்கரையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள பள்ளி-கல்லூரிகள் முன்பு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் இந்த போராட்டத்தை குறிப்பிட்ட சில அமைப்பினர் தூண்டி விடுவதும் தெரிய வந்துள்ளது.

அவர்கள் யார்-யார்? என்பது பற்றி உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் மாணவர்கள் போராட்டம் பெரிதாகாமல் தடுக்க முடியும் என்பதே போலீசாரின் நம்பிக்கையாக உள்ளது. #tamilnews

Tags:    

Similar News