துடியலூர் அருகே மது என்று நினைத்து ஆசிட் குடித்த காவலாளி பலி
கவுண்டம்பாளையம்:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சின்கோனா பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவர் துடியலூர் கு. வடமதுரை அருகே குடும்பத்துடன் தங்கி அங்குள்ள கம்பெனிக்கு காவலாளியாக சென்று வந்தார். குமார் வீட்டிற்கு தெரியாமல் மது குடித்து வந்தார். சம்பவத்தன்று குளியல் அறையில் மறைத்து வைத்திருந்த மதுவை குடிக்க நினைத்தார். அதன்படி மறைத்து வைத்திருந்த மதுவை குடித்தார். சிறிது நேரத்தில் வாந்தி மயக்கத்துடன் வெளியே வந்து வயிறு எரிகிறது என்று கதறி துடித்தார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் குடித்தது மது அல்ல. குளியல் அறைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட் என்று கூறினார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.