செய்திகள்

கன்னங்குறிச்சி தச்சு தொழிலாளி கொலை வழக்கு: மேலும் ஒரு சட்டக்கல்லூரி மாணவன் கைது

Published On 2017-12-29 12:40 GMT   |   Update On 2017-12-29 12:40 GMT
தச்சு தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒரு சட்டக்கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். இரண்டு பேரை தேடி வருகிறார்கள்.

ஏற்காடு:

சேலம் கன்னங்குறிச்சி குரும்பப்பட்டி பூங்கா சாலை பகுதியை சேர்ந்தவர் தச்சுத்தொழிலாளி பாபு (வயது34). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழுத்தறுக்கப்பட்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய ஏற்காடு போலீசார் பாபுவின் வீட்டருகே வசிக்கும் பொன்னுசாமி மகன் கொல்லப்பட்டி குமார்(47), கேசவன் மகன் பிரேம் குமார், (24), ரங்கசாமி மகன் ரமேஷ் (35). தியாகராஜன் (23), ரஞ்சித்குமார் (24) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் கடந்த 12-ந் தேதி சேலம் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அருப்புக்கோட்டையை சேர்ந்த ரவி மகன் வினோத்குமார்(20) என்பவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் 3 நபர்களில் ஒருவர் சேலம் சட்டகல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையை சேர்ந்த கோபு மகன் கோபாலகிருஷ்ணன் ஆவார். அவரை நேற்று ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் கைது செய்து சிறையிலடைத்தார். இந்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News