செய்திகள்
நாமக்கல் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் குன்னமலை, நல்லப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 45). விவசாயி. சம்பவத்தன்று இவர் மொபட்டில் வசந்தபுரம் பகுதியில் சென்றபோது அங்குள்ள ஒரு வளைவை கடக்க முயன்றார். அப்போது நிலைதடுமாறி அவர் மொபட்டுடன் கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பின் பக்க தலையில் பலத்த அடிபட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இவருக்கு சுமதி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மேற்கண்ட விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.