செய்திகள்

மதுசூதனனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி 6-ந் தேதி பிரசாரம்

Published On 2017-12-03 10:21 GMT   |   Update On 2017-12-03 10:45 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து வருகிற 6-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

சென்னை:

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலின் போது ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் போட்டியிட்ட இவருக்கு இரட்டை மின்கம்பம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இப்போது அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்துவிட்டதால் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுகிறது.

மக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்துள்ளதால் அ.தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்துடன் தேர்தல் களத்தில் ஓட்டு கேட்டு வருகின்றனர்.

மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் செய்ய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 6-ந் தேதி (புதன்கிழமை) ஆர்.கே.நகர் தொகுதி செல்கிறார்.


தண்டையார்பேட்டையில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் மதுசூதனனுடன் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்கிறார். எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சென்று ஓட்டு கேட்கின்றனர்.

கடந்த தேர்தலின் போது அமைச்சர்கள் அனைவரும் ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டு ஓட்டு கேட்டது போல் இந்த முறையும் தொகுதியில் முகாமிட்டு ஓட்டு கேட்க உள்ளனர். அனைத்து அமைச்சர்களும் நாளையில் இருந்து தொகுதியில் உலா வர உள்ளனர்.

ஏற்கனவே ஓட்டுகேட்ட அதே பகுதிகள் மாற்றம் இன்றி இப்போதும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சர்களும், நாளை முதல் ஓட்டு கேட்க வருவதால் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்குகிறது.

Tags:    

Similar News