செய்திகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி - செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Published On 2017-11-14 04:52 GMT   |   Update On 2017-11-14 05:14 GMT
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து உள்ளது.

சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் 4 ஏரிகளும் வறண்டு இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

கடந்த வாரம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்து வந்தது.

கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து இருந்த நிலையில் நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.


சோழவரம் ஏரி 75 சதவீதம் நிரம்பி விட்டது. ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி தற்போது ஏரியில் 587 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

ஏரிக்கு 162 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லை.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி ஏரியில் 924 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 196 கனஅடி தண்ணீர் வருகிறது. 16 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 கன அடி. ஏரியில் 1410 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

ஏரிக்கு 801 கனஅடி வருகிறது. 84 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி ஏரியில் தற்போது 1388 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 256 கனஅடி நீர் ஏரிக்கு வருகிறது. 48 கனஅடி வெளியேற்றப்படுகிறது.


நீர்வரத்து அதிகரிப்பால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் 40 சதவீத கொள்ளவை எட்டி விட்டது. தொடர்ந்து மழை நீடித்தால் ஏரிகளின் நீர்மட்டம் அதிரடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 924 ஏரிகள் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் பிள்ளைப்பாக்கம், மணிமங்கலம், மானாம்பதி, தையூர், சிறுதாவூர், மதுராந்தகம் ஏரிகள் உள்பட மொத்தம் 265 ஏரிகள் முழு கொள் ளளவை எட்டி விட்டன.

261 ஏரிகள் 75 சதவீதமும், 248 ஏரிகள் 50 சதவீதமும், 150 ஏரிகள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பி இருக்கிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளின் நீர் மட்டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News