செய்திகள்

ஜெயா டி.வி. சி.இ.ஓ. நிர்வகித்து வந்த 100க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிகாரிகள் தகவல்

Published On 2017-11-12 00:53 GMT   |   Update On 2017-11-12 00:53 GMT
ஜெயா டி.வி. சி.இ.ஓ. விவேக் நிர்வகித்துவந்த 20க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் உட்பட 100க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகளை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
சென்னை:

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளில் நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவிலான சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம், சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் ஜெயா வி.வி. சி.இ.ஓ. விவேக் இல்லம் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், விவேக் நிர்வகித்துவந்த 100க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில் 20க்கும் மேற்பட்டவை போலியானது என வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News