செய்திகள்

ஆலங்குளத்தில் கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2017-11-07 11:51 GMT   |   Update On 2017-11-07 11:51 GMT
ஆலங்குளத்தில் கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி மனு கொடுக்க வந்தபோது தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி புகார்கள் மீது போலீசார் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆலங்குளத்தில் கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குளம் பறம்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தங்கப்பழம்(வயது 29). பீடி சுற்றும் தொழிலாளியான இவர் ஒரு மகளிர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

இந்த குழுவில் வாங்கிய கடனுக்காக இவர் தனியார் ஒருவரிடம் ரூ.30 ஆயிரம் வாங்கினாராம். வாங்கிய பணத்தை முறையாக வட்டியுடன் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்த நபர் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்தாராம்.

இதனால் மன வேதனை அடைந்த தங்கப்பழம் வி‌ஷத்தை குடித்துவிட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News