செய்திகள்

சிவகாசியில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

Published On 2017-10-22 16:34 GMT   |   Update On 2017-10-22 16:34 GMT
சிவகாசியில் நாளை அண்ணா மலையார் நகர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கல் மெயின் ரோடு அண்ணா மலையார் நகர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.

சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட பலர் பேசுகிறார்கள். அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி முன்னிலை வகிக்கிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரின் உருவப் படத்தினை திறந்து வைத்து ரூ.48.81 கோடி மதிப்பிலான முடிவுற்ற 146 திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.13.38 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 21,885 பயனாளிகளுக்கு ரூ.117.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

மேலும் வழங்கியும் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாளை மதியம் 1 மணியளவில் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் நடந்து வருகிறது.

Tags:    

Similar News