அரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கூலித்தொழிலாளி பலி
அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கெலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் சுரேஷ் (வயது 23) கூலித்தொழிலாளி. நேற்று இரவு வேலை முடித்து விட்டு அரூரில் இருந்து கெலப்பாறையில் உள்ள வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார்.
அப்போது அவர் கெலப்பாறை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சுரேஷ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி அரூர் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் மாதேஸ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.