செய்திகள்

புதுவையில் 108 மருத்துவ மாணவர்களை நீக்க ஐகோர்ட்டு இடைக்கால தடை

Published On 2017-09-19 10:12 GMT   |   Update On 2017-09-19 10:13 GMT
மருத்துவ கவுன்சில் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதுவையில் 108 மருத்துவ மாணவர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் 7 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கடந்த ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையில் விதிமுறை மீறல் நடந்ததாக மத்திய மருத்துவ கவுன்சிலிடம் புகார் கூறப்பட்டது.

இதில் 778 மாணவர்கள் விதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறி இருந்தனர்.

இதையடுத்து இந்த மாணவர்களை நீக்கும்படி மத்திய மருத்துவ கவுன்சில் சமீபத்தில் உத்தரவிட்டது. எனவே, மாணவர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை புதுவை அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 108 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், கல்லூரியில் சேர்ந்ததில் நாங்கள் எந்த விதிமுறை மீறல்களிலும் ஈடுபடவில்லை. அதே நேரத்தில் மற்ற வகையில் நடந்த விதிமுறை மீறல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

நாங்கள் ஏற்கனவே ஒரு ஆண்டு கல்வியை முடித்து விட்டோம். இப்போது அடுத்த ஆண்டு கல்வியை தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் முடிந்து விட்டது.

இந்த நேரத்தில் எங்களை வெளியேற்றினால் எங்களுக்கு 2 ஆண்டு கல்வி பாதிக்கும். எங்கள் எதிர் காலமே பாழாகி விடும். எனவே, எங்களை நீக்க உத்தரவிட்ட மத்திய மருத்துவ கவுன்சில் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இதை விசாரித்த நீதிபதி 108 மாணவர்களையும் நீக்குவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் மத்திய மருத்துவ கவுன்சில், புதுவை அரசு மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆகியவை 23-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News