பூந்தமல்லி அருகே லாரி திருடர்கள் 2 பேர் கைது
பூந்தமல்லி:
பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையை அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் தனக்கு சொந்தமான லாரியை அதே பகுதியில் நிறுத்தி வைத்து இருந்தார்.
கடந்த 5-ந் தேதி இரவு லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து நசரத்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது திருடப்பட்ட லாரி காஞ்சீபுரம் அருகே உள்ள பாலூர் பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக திருவேற்காடை சேர்ந்த பிரகாஷ், நூம்பலை சேர்ந்த திருமால் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி பல்வேறு பகுதியில் திருடிய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.