மாணவியை காதலிப்பதில் போட்டி: டிரைவருக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது மகன் பாண்டியராஜன் (வயது 24). அதே பகுதியைச் சேர்ந்த தரக் கொடியான் மகன் குணா (20).
இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருகின்றனர். பாண்டியராஜனும், குணாவும் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மாணவி 2 பேரையும் காதலிக்கவில்லை.
மாணவியை காதலிப்பது தொடர்பாக 2 பேருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட ஆத்திரம் அடைந்த குணா, பாண்டியராஜனை கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நிலைமை மோசமானதால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் தனுஷ்கோடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குணாவை கைது செய்தனர்.