செய்திகள்

4-ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருக்க கட்டாயமில்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

Published On 2017-09-01 10:48 GMT   |   Update On 2017-09-01 10:48 GMT
வாகன ஓட்டிகளிடம் வரும் 4-ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் கேட்டு கட்டாயப்படுத்தப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அதை உரிய அதிகாரிகள் கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை 
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து, இந்த நடைமுறை செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, டிராபிக் ராமசாமி மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி துரைசாமி வழக்கை விசாரித்தார். அப்போது நீதிபதி துரைசாமி, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞரிடம் சில கேள்விகளை முன்வைத்தார்.  மழை மற்றும் இயற்கை சீற்றம் போன்ற காலங்களில் ஆவணங்கள் சேதமடைய வாய்ப்பு இருக்கிறது, இயற்கை சீற்றங்களின் போது ஆவணங்கள் சேதமடைந்தால் யார் பொறுப்பேற்பது? என கேள்வி கேட்டார்.

இதைதொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில், வழக்கு தொடர லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு முகாந்திரம் இல்லை. மேலும், வரும் 4-ம் தேதி வரை வாகன ஓட்டிகளிடம் அசல் உரிமம் கேட்டு கட்டாயப்படுத்தப்படாது என தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நீதிபது துரைசாமி இந்த வழக்கை தலைமை நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். எனவே, வரும் 4-ம் தேதி வரை தங்களது கையில் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News