செய்திகள்

டெங்கு காய்ச்சல்: சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 100 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2017-08-14 10:24 GMT   |   Update On 2017-08-14 10:24 GMT
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 45 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தனிவார்ட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை:

டெங்கு காய்ச்சல் தமிழகத்தை மிரட்டி வருகிறது. இதுவரை 35 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மருத்துவ குழுவினர் காய்ச்சல் பரவிய பகுதிகளில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

சென்னை அரசு ஆஸ்பத் திரியில் 45 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 60 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

மற்றவர்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை அரசு ஆஸ்பத்திரி டீன் நாராயணபாபு கூறியதாவது:-

தினமும் 10-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 45 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தனிவார்ட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News