செய்திகள்
காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி: முதலமைச்சர் அறிவிப்பு
ஜம்மு-காஷ்மீரில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த இளையராஜா என்ற வீரர் மரணம் அடைந்தார்.
டெல்லியில் ராணுவ வீரர் இளையராஜாவின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள அவரது சொந்த கிராமமான கண்டனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த இளையராஜாவின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக ராணுவ வீரர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் இளையராஜா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த ராணுவ வீரர் இளையராகா அவர்களின் குடும்பத்திற்கு இருபது லடம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.