செய்திகள்

கதிர்காமத்தில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2017-07-31 11:41 GMT   |   Update On 2017-07-31 11:41 GMT
கதிர்காமத்தில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென நகையை பறித்து சென்றான்.

புதுச்சேரி:

புதுவை கதிர்காமம் பாரதி தெருவை சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மனைவி பாக்யலட்சுமி (வயது 65). இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். சம்பந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனதால் பாக்யலட்சுமி தனியாக வசித்து வந்தார்.

இவர் தினமும் அதிகாலை பால் வாங்க அருகே உள்ள பால் பூத்துக்கு செல்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று அதிகாலை பால் வாங்க பாக்யலட்சுமி பால் பூத்துக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென பாக்யலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தார்.

பாக்கியலட்சுமி திருடன்... திருடன்.. என அலறியதால் அந்த ஆசாமி செயினுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டான். இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

செயினை பறிகொடுத்த பாக்யலட்சுமி இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.

Tags:    

Similar News